மணப்பாறை அருகே ஊரின் பெயரை மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
திருச்சி, ஜூலை 15 மணப்பாறை அருகே ஊரின் பெயரை மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் சாலை மறியல். குடும்ப அட்டைகளை ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு. இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள எப்.கீழையூர் கிராமம். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வூர் எப்.கீழையூர் என்றே அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அரசு ஆவணங்களிலும் எப்.கீழையூர் என்ற பெயர் அரியாக்கவுண்டம்பட்டி என மாற்றப்பட்டிருப்பது மக்களுக்கு தெரியவந்துள்ளது. பள்ளி மாணவர்கள் சான்றிதழ்கள், ஆதார் கார்டு, நில ஆவணங்கள், பட்டா சிட்டா, வீட்டு வரி உள்ளிட்டவைகளிலும் எப்.கீழையூர் என இருக்கும் நிலையில் தற்போது ஊரின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் பாஸ்போர்ட், நிலங்கள் தொடர்பான ஆவணங்களை மாற்றும் போதும், மாணவர்களை பள்ளி மற்றும் கல்லூரியில் சேர்க்கும்போதும் பிரச்சினைகள் ஏற்படுதாவும் கூறப்படுகிறது. பொதுமக்களின் சம்மதமின்றி எவ்வாறு பெயர்மாற்றப்பட்டது தங்கள் ஊரின் பெயரை பழையபடியே எப். கீழையூர் என மாற்றம் செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் மணப்பாறை – கோவில்பட்டி சாலையில் எபா.கீழையூர் பிரிவு சாலையில் மறியல் போராட்டம். மணப்பாறை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாத நிலையில் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைப்பதாகக்கூறி அனைவரின் ரேசன்கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை சேகரித்து அதிகாரிகளிடம் கொடுத்தபோது அதனை வாங்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் போராட்டம் தொடர்ந்ததால் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதத்திற்குள் ஊர்ப்பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் சமாதான மடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் மறியல் போராட்டத்தால் மணப்பாறை – கோவில்பட்டி சாலையில் இரண்டு மணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.