கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட வாலிபருக்கு கத்திக்குத்து
திருச்சி சங்கிலியாண்டபுரம் கோவிந்தகோனார் வீதியை சேர்ந்தவர் முகமது அனீஸ்(வயது 26). இவர் அமிர்தஆசாரி வீதியை சோ்ந்த அய்யப்பனிடம்(28) ரூ.10 ஆயிரம் கொடுத்து மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளார். ஆனால் அய்யப்பன் மோட்டார் சைக்கிளுக்கான ஆர்.சி.புத்தகத்தை வழங்காமல் காலம் தாழ்த்தியதாக தெரிகிறது. இதனால், கடந்த பிப்ரவரி மாதம் மோட்டார் சைக்கிளை அய்யப்பனிடமே முகமது அனீஸ் ஒப்படைத்துவிட்டு, தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று பாலக்கரை பகுதியில் உள்ள ரேஷன்கடை அருகே அய்யப்பனிடம் தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி முகமது அனீஸ் கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே அய்யப்பன் தனது நண்பருடன் சேர்ந்து முகமது அனீசை கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர். அவருடைய நண்பரை தேடி வருகிறார்கள்.