சமயபுரம் கோயில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தைபூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
இதன் படி முதல்நாளான இன்று காலை 7 மணிக்கு கோயிலின் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியர்களைக் கொண்டு வேதமந்திரங்கள் முழங்க, அஸ்திர தேவர்களுக்கும், தங்க கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சமயபுரம் மாரியம்மன் படம் தாங்கிய தைப்பூசக் கொடியினை ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு அபிஷேகமும், 6 மணிக்கு மஹா தீபாராதணையும், இரவு 8 மணிக்கு அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி, திருவீதி உலா நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து 11 நாட்கள் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து திருவீதி உலா வருகிறார்
10 ம் நாளான 4 ம் தேதி காலை 8 மணிக்குள் அம்மன் கோயிலிருந்து தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லாக்கில் எழுந்தருளி நொச்சியம் வழியாக திருக்காவிரி சென்றடைதலும், மாலை 3 மணிக்கு தீர்த்த வாரி கண்டருளுதலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை சீரங்கம் அரங்கநாதரிடமிருந்து சீர் பெறும் நிகழ்ச்சியும், இரவு 1 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகா அபிஷேகமும், அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
11 ம் நாளான 5 ம் தேதி காலை 6 மணிக்கு வடதிருக்காவிரியிலிருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக நடைபாதை உபயங்கள் கண்டருளி இரவு 11 மணிக்கு அஸ்தான மண்டபம் சேருதலும், இரவு 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைப் பெற்றுகொடி மரத்திற்கு அம்மன் புறப்பாடாகி கொடி படம் இறக்கம் நிகழ்வு நடைபெறுகிறது, இரவு 12 மணிக்கு கேடயத்தில் அம்மன் திருவீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்து அர்த்தஜாம பூஜை நடைபெற்று திருக்கோயில் நடை சாத்துதல் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மற்றும் கோயில் பணியாளர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.