வாழையூர் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் திருத்தேர் திருவிழா.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாழையூர் கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
வாழையூர் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் வழக்கம். இந்நிலையில் 14 ஆண் டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான மாரியம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் காலையில் பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதனை தொடர்ந்து மதியம் பொங்கல் வைத்து கிடா வெட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மாலையில் அருள்மிகு மாரியம்மன் திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது. இந்தத் திருவிழாவில் சுற்றுப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று மதியம் மஞ்சள் நீராட்டு விழாவும் குடி விடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை புதிய தமிழகம் கட்சியின் மாநில துணை கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான வாழையூர் குணா அவர்கள் தலைமையில் ஊர் பொதுமக்கள் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.