பூட்டியே கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறை.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோயிலுக்கு கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் பாலூட்டுவதற்கு வசதியாக கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ச.கண்ணனூர் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள பழைய பேருந்து நிலையம் நிலையத்தின் ஒரு பகுதியில் பாலூட்டும் அறை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது பாழடைந்த நிலையிலும் வழிப்போக்கர்கள் தங்குமிடமாகவும் அந்த அறை உள்ளது. மேலும் பாலூட்டும் அறை எப்போதும் பூட்டியே கிடக்கிறது. இதனால் தாய்மார்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் குப்பைகள் நிறைந்து உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. பாலூட்டும் அறை உள்ள கட்டிடம் பாழடைந்த நிலையில் உள்ளது. இது குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே கட்டிடத்தை சீரமைத்து பாலூட்டும் அறையை திறந்து தாய்மார்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகமும், ச. கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.