பாலகட்டை மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
திருச்சி, ஜூன் 4 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அழகியமணவாளம் ஊராட்சி கோபுரப்பட்டியில் உள்ள புள்ளம்பாடி வாய்க்காலின் பாலக்கட்டை மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அழகியமணவாளம் ஊராட்சி கீழக்கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவரது மகன் சதீஷ்குமார்(24) .இவர் நேற்று இரவு தனது மோட்டார் பைக்கில் திருப்பைஞ்சீயிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கோபுரப்பட்டியில் உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் பாலக்கட்டையில் எதிர்பாராத விதமாக மோட்டார் பைக் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் வாய்க்காலில் தவறி விழுந்த சதீஸ்குமார் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்த தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.