திருச்சியில் பெய்த மழை – நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்!!
திருச்சி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் மிகுந்த கனமழை பெய்தது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், உறையூர் உள்ளிட்ட பகுதிகளிலும், சுற்றுவட்டார பகுதிகளான மணிகண்டம், முசிறி, துறையூர், மணப்பாறை, லால்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் இரவு பெய்த கனமழை காரணமாக லால்குடியில் உள்ள தரணிபாளையம், நல்லூர், நம்புகுறிச்சி ஆகிய கிராமங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது அறிந்த மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரடியாக களத்தில் சென்று நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அப்பகுதியில் உள்ள அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதோடு, அப்பகுதியில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்தார். மேலும் இந்த நிகழ்வில் நள்ளிரவில் மாவட்ட ஆட்சியரோடு லால்குடி எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் கலந்து கொண்டார்.
