திருச்சியில் காலாவதியான 3,000 பாட்டில் குளிர்பானங்கள் பறிமுதல்!
திருச்சி அருகில் உள்ள சோமரசம்பேட்டையில் காளி குளிர்பான தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. அங்கு காலாவதியான குளிர்பான பாட்டில்களை மீண்டும் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி மாற்றி விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
தகவலின் பேரில் கடந்த 2 நாட்களாக உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட ஆலையில் ஆய்வு செய்தனர்.
அப்போது தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி கண்ணாடி குளிர்பான பாட்டில்களில் அழியும் மையினால் அச்சிடபட்டிருந்தது கண்டறியப்பட்டு 3,000 குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த பாட்டில்கள் பிணை பத்திரம் போடப்பட்டு ஒரு அறையில் சீல் செய்யப்பட்டு பிரிவு 55-இன் கீழ் ஒரு வார காலத்திற்குள் இனி தயாரிக்கும் குளிர்பானங்கள் அனைத்தும் அழியாத மையினால் அச்சிட பட வேண்டும் என்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.