இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2022-ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளிலும் 2022 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் வருகின்ற 01.11.2021 முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை 27.11.2021 சனிக்கிழமை மற்றும் 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. வருகின்ற 01.01.2022 அன்று 18 வயது நிரம்பியவர்கள் (அதாவது, 31.12.2003 அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள்) சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வயது மற்றும் இருப்பிடத்திற்குரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து, புதியதாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம்.
அயல்நாடு வாழ் வாக்காளர்கள் படிவம் 6A-இல் நேரடியாக வாக்காளர் பதிவு அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளரது பெயரினை நீக்கம் செய்திட படிவம்-7-னையும், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் படிவம் 8-னையும், சட்டப் பேரவைத் தொகுதிக்குள் இடம் பெயர்ந்து புதிய இடத்தில் வசிப்பவர்கள் படிவம் 8ஏ-யினையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான விண்ணப்பங்கள் வருகின்ற 01.11.2021 முதல் 30.11.2021 வரை அனைத்து வேலை நாட்களிலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், (சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் உட்பட) வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளா பதிவு அலுவலர் 1 அலுவலகங்களில் உரிய படிவத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்டவர்கள், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களைக் கொடுக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் மாறுதல்கள் செய்தல், ஆகியவற்றினை இந்திய தேர்தல் ஆணையத்தின் கருடா செயலி, வாக்காளர் உதவி மைய கைபேசி செயலி மற்றும் www.nvsp.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
எனவே 2022-ஆம் ஆண்டிற்குரிய சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின்போது தகுதியான வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் தொடர்பான ஐயப்பாடுகள் ஏதுமிருப்பின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்டப்பட்ட வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் 1950 என்ற கட்டணமில்லா எண்ணினை தொடர்பு கொண்டு விவரங்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராக தெரிவித்துள்ளார்.