உரிமம் இல்லாமல் விதைகளை விற்பனை செய்தால் நடவடிக்கை
திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் வசந்தா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டத்தில் நடப்பு நெல் தரிசு பருவத்திற்கு தேவையான உளுந்து மற்றும் எள் விதைகளை வாங்கும்போது மிகுந்த கவனத்துடன் வாங்க வேண்டும். விதையின் ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள் மற்றும் பருவம் அகியவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும். உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதையின் மேற்கண்ட விபரத்தை விற்பனை ரசீதில் குறிப்பிட்டு விவசாயியின் கையொப்பம் மற்றும் விற்பனையாளர் கையொப்பத்துடன் வாங்க வேண்டும்.
இதில் ஏதேனும் குறை காணப்பட்டால் விதை விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உரிமம் இல்லாமல் விற்பனை செய்தாலோ, காலாவதியான விதைகளை விற்பனை செய்தாலோ, விற்பனை ரசீது தர மறுத்தாலோ விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் 0431-2420587 என்ற தொலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.