திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சரகத்திற்குட்பட்ட திருச்சி கல்லணை சாலையில் பொன்னிடெல்டா, திருவளர்ச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. காவிரி கரையோரம் உள்ள இந்த பகுதிகளில் ஏராளமான வளைவுகளும் உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து என்பது சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில் கல்லணையில் இருந்து பைக்கில் வந்த 2 பேர் திருவளர்ச்சோலை மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள திருப்பத்தில் வேகமாக வந்து போது முன்னால் சென்ற லாரியின் பின்னால் மோதி நிலைதடுமாறி விழுந்தனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாலும், அந்த பகுதியில் மேல்நிலைப்பள்ளி உள்ளதாலும் பள்ளி மாணவ, மாணவர்களின் பாதுகாப்பு கருதி வேகத்தடை அமைக்க கோரி திடீரென திருவளர்ச்சோலை பொதுமக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் (பொறுப்பு) பாரதிதாசன் மற்றும் போலீசார் சம்பவயிடம் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து 30 நிமிடம் நீடித்த சாலை மறியலை பொதுமக்கள் விலக்கி கொண்டனர். இதனால் திருச்சி கல்லணை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.