திருவானைக்காவல் பிடாரியார் இரணியம்மன் கோவில் திருவிழா
திருச்சி திருவானைக்காவல் பிடாரியார் இரணியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழாவிற்காக கடந்த 8-ந் தேதி முதல் காப்பும், 15-ந் தேதி இரண்டாம் காப்பும், நேற்று மூன்றாம் காப்பு கட்டப்பட்டு திருவிழா தொடங்கியது. விழாவின் முதல்நாளான நேற்று இரணியம்மன் யானை வாகனத்தில் எழுந்தருளி ஊரின் பல்வேறு பகுதிகளில் வலம் வந்தார். இரண்டாம் நாளான இன்று (திங்கட்கிழமை) குதிரை வாகனத்திலும், மூன்றாம் நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) பூதவாகனத்தில் அம்மன் எழுந்தருளி ஊரின் பல்வேறு பகுதிகளில் வலம் வருவார். அப்போது சன்னதி வீதியில் உள்ள காளியம்மன் கோவிலில் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
23-ந் தேதி அம்மன் பூந்தேரில் வீதியுலா வருவார். அப்போது வழிநெடுக பக்தர்கள் ஆடுகள் பலியிட்டும், மாவிளக்கு வைத்தும் வழிபடுவர். இவ்வகையில் 25-ந் தேதி வரை ஊரின் பல பகுதிகளுக்கும் செல்லும் இரணியம்மனின் தேர் அன்று இரவு கோவில் திரும்பும். அத்துடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவடையும். விழாவிற்கான ஏற்பாடுகளை திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.