திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சமையல் மாஸ்டர் தீக்குளிக்க முயற்சி!
கரூர் மாவட்டம் குளித்தலை காவக்காரன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 34). சமையல் மாஸ்டரான இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவருடைய மனைவி கருத்துவேறுபாடு காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து மணிகண்டனின் குழந்தையை அவரது மனைவி காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மணிகண்டன் காப்பகத்துக்கு சென்று குழந்தையை பார்க்க முயன்றுள்ளார்.
ஆனால் அங்கு அவரை அனுமதிக்கவில்லையாம். இதனால் மனவேதனை அடைந்த அவர் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து மண்ணெண்ணை பாட்டிலை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, காப்பகத்தில் உள்ள தனது குழந்தையை தன்னிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என கூறினார். இந்த சம்பவம் குறித்து செசன்சு கோர்ட்டு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.