லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது!
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் மாராடி கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வின் மனைவி சத்யா (வயது 35) இவருக்கு மாராடி கிராமத்தில் அரசால் வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டு கிடைக்கப்பட்டுள்ளது. இலவச வீட்டு மனை பட்டா கடந்த 22 8 2023 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியரால் 138 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாவட்ட ஆட்சியரிடம் இலவச வீட்டு மனை பட்டா பெற முடியாத காரணத்தால் சத்தியா மறுநாள் 23.8.23 அன்று கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் சென்று அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் சுமதி என்பவரிடம் தனது வீட்டு மனை பட்டா கொடுக்க வேண்டுமாறு கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் சுமதி (வயது 34) பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே உங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க முடியும் என்று கூறியுள்ளார். இந்த தகவலை சத்யா தனது கணவர் அஸ்வினிடம் தெரியப்படுத்திய போது அவர் பணமில்லாமல் பட்டா பெற்று வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக சத்தியா மீண்டும் 29.8.23 அன்று மாராடி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் சென்று வீஏஓ சுமதியை சந்தித்து தனது வீட்டுமனை பட்டாவை கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் . சுமதி 3000 ரூபாய் குறைத்துக் கொண்டு 7000 கொடுத்தால் மட்டுமே வீட்டுமனை பட்டாவை வழங்க முடியும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சத்தியா திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி திரு மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் சத்தியா இன்று 30 8 2023 மதியம் மாராடி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் சுமதியிடம் 7000 ரூபாய் லஞ்சம் கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கிராம நிர்வாக அலுவலர் சுமதி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.