திருச்சி கொட்டப்பட்டு அருகே ஆவின் பால்பண்ணை செயல்பட்டு வருகிறது.இந்த பால்பண்ணையில் இருந்து திருச்சி, அரியலூர்,பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இங்கிருந்து பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்த பண்ணையில் பொறியியல் மேலாளராக முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதியின் இரண்டாவது மகன் ஹரிராம் பணியாற்றி வந்தார்.

பண்ணையில் 5 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் பாய்லர் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.கடந்த வாரம் அந்த பாய்லர் திடீரென பழுதாகியது. அதனை பராமரித்து பழுது பார்க்கும் பொறுப்பு ஹரிராமிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஆனால் பாய்லர் பழுதாகிய நிலையில் ஹரிராம் 2 நாட்கள் விடுமுறையில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பணியின் போது அலட்சியமாக இருந்தாகவும் தனது பொறுப்பில் இருந்து தவறியதற்காகவும் திருச்சி ஆவின் பொறியாளர் மேலாளர் ஹரிராமை சஸ்பெண்ட் செய்து ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.