திருச்சி மாவட்டம் முசிறி – குளித்தலை பெரியார் பாலத்தில் முசிறி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த வாகனத்தை சோதனை செய்ததில்,
அதை ஓட்டிய வாகன ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.
அந்த வாகனத்தின் முன்பு பம்பர் பொருத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ 650 அபராதம் விதிக்கப்பட்டதுடன் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த பம்பரை கழட்டும்படி காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டது.

அப்போது அவ்வழியே வந்த நோட்டரி பப்ளிக் ஒருவரின் வாகனம் பம்பர் உடன் வந்துள்ளது. ஆனால் காவல்துறையினர் அதனைக் கண்டுகொள்ளாது அனுப்பினர்.
இதனைக் கண்ட அபராதம் செலுத்திய வாலிபர் வழக்கறிஞர் வாகனத்திற்கும் அபராதம் விதிக்குமாறு போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி ஒர் அறிக்கை வாயிலாக விளக்கமளித்துள்ளார். அதில் வாகனத்தை இயக்கியவர் மீது வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாததற்கு ஒரு வழக்கும், அவ்வாகனத்தின் முன் பம்பர் பொருத்தி இருந்ததால் அதற்கு ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சமூகவலைதள பதிவு குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, விசாரணைக்குப் பின் தவறிழைத்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்
வாகன சோதனையில் ஈடுபடும் அலுவலர்களும், காவலர்களும் சட்டத்தை மீறுபவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் முசிறி பகுதியின் பணியில் இருந்த எஸ்.ஐ வடமலையை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்