சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் – காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்த முதல்வர்!
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதில் சிறிய கோயில்களில் ஒரு நாளைக்கு 50 பேர், பெரிய கோவில்களில் நாளொன்றுக்கு 400 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக நாள் முழுவதும் கோவில்களில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. திருச்சி மாவட்டத்திலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்குகிறது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்படும். தற்போது கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு உணவு பொட்டலங்களாக வழங்கப்படும்.கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பிய உடன் அனனதான கூடத்தில் பக்தர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அன்னதான கூடத்தில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கடந த 14 ந்தேதி ஆய்வு செய்தார். அப்போது சமையலறை சமையல் பரிமாறும் அறைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அன்னதான திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் கானொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, அறநிலை துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.