பைக்குகள் மோதிய விபத்து : கணினி மெக்கானிக் உயிரிழப்பு
திருச்சி, ஆக. 31 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூணாம்பாளையத்தில் உள்ள ஆர் கே ஜி நகர் விஸ்தரிப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் பைக்குகள் மோதிய விபத்தில் கம்ப்யூட்டர் மெக்கானிக் உயிரிழந்தார்.ஒருவர் காயம்.
மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் மேலப்பக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (50). இவர் தனது வீட்டில் கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் தொழில் செய்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று தனது மோட்டார் பைக்கில் பூணாம்பாளையத்திலிருந்து சென்று கொண்டிருந்தார் அதேபோல் மண்ணச்சநல்லூர் அருகே ஓமாந்தூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன்குருபரன் (20) மற்றும் அவரது நண்பர் சிபிராஜ் ஆகியோர் எதிரே வந்து கொண்டிருந்தனர். குருபரன் மோட்டார் பைக்கை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பூணாம்பாளையத்தில் உள்ள ஆர் கே ஜி நகர் விஸ்தரிப்பு பகுதியில் மோட்டார் பைக்குகள் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் பைக்குகள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த பாஸ்கரை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பாஸ்கரின் உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது அவர் உயிரிழந்து விட்டது தெரியவந்தது. அதேபோல் குருபரன் மற்றும் மோட்டார் பைக்கில் வந்த நண்பர் சிபிராஜுக்கும் காயம் ஏற்பட்டது
இந்த விபத்து குறித்து பாஸ்கரின் அண்ணன் மகன் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.