138 கிலோ கெட்டுப்போன அசைவ- காலாவதியான உணவு பொருட்கள் அழிப்பு!
திருச்சி மத்திய பேருந்து நிலையம், பால்பண்ணை முதல் காட்டூர் துவாக்குடி, முசிறி மற்றும் மணப்பாறை பகுதியை சுற்றியுள்ள ஷவர்மா கோழிக்கறி விற்பனை செய்யும் மற்றும் அசைவ உணவு விற்பனை செய்யும் 47 கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு செய்ததில் கடைகளில் கெட்டுப்போன கோழி இறைச்சி மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் 138 கிலோ வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் ஐந்து கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் பிரிவு 55 நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேலும்
மிக மோசமாக இருந்த 4 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 56 இன் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில் ஷவர்மா கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் அசைவ உணவு விற்பனை செய்யும் உணவகங்கள் அன்றையதினம் மீதமாகும் கோழி இறைச்சியை கண்டிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது. ஆய்வின்போது அவ்வாறு குளிர்சாதன பெட்டியில் கோழி இறைச்சியோ வேறு

கெட்டுப்போன உணவு பொருளோ கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இப்ராஹிம், வசந்தன், ஸ்டாலின், பாண்டி, பொன்ராஜ், மகாதேவன், ரெங்கநாதன் மற்றும் அன்புச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர். பொதுமக்களும் இதுபோன்று தங்களது பகுதி அருகில் காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவு பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.