தீபாவளி தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட தொடங்கியது
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், “தீபாவளி” பண்டிகையை முன்னிட்டு, திருச்சியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், திருச்சி மாநகரில் தஞ்சாவூர் மார்க்கம், புதுக்கோட்டை மார்க்கம் மற்றும் மதுரை மார்க்கம் ஆகிய வழித்தடங்கில் செல்லும் பேருந்துகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில், மன்னார்புரம் சர்வீஸ் ரோட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை இன்று (21.10.22) திருச்சி மாநகர காவல் ஆணையர் பார்வையிட்டு, மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்தை 09.30 மணிக்கு துவங்கி வைத்தார்கள். மேலும் காவல் துணை ஆணையர்கள், தெற்கு மற்றும் வடக்கு, கண்டோன்மெண்ட் சரக காவல் உதவி ஆணையர், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் உதவி ஆணையர் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு தக்க அறிவுரை வழங்கினார்கள்.
மேலும், திருச்சி மாநகரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர் அவர்கள் கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
1. தேசிய நெடுஞ்சாலையில் எக்காரணத்தை கொண்டும் எவ்வித வாகனங்களையும்போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக்கூடாது.
2. பேருந்துகளை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றவேண்டும். போக்குவரத்து சிக்னல்களில் பயணிகளை இறக்கி, ஏற்றக் கூடாது.
3, வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் நிறுத்தவேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலையோரங்களிலும் நிறுத்தக்கூடாது.
4. வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து விற்பனை செய்யக் கூடாது.
5. பட்டாசு வியாபாரம் செய்பவர்கள், அனுமதி பெற்ற இடத்தில் மட்டும்தான் விற்பனை செய்யவேண்டும். தரைக்கடை மற்றும் தள்ளுவண்டியில் வைத்து பட்டாசுகளை விற்பனை செய்ய கூடாது.
மேற்படி விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது பற்றிய தகவலை காவல் கட்டுப்பாட்டு அறை எண்:100-க்கும் மற்றும் மாநகர காவல் ஆணையர் அவர்களது அலுவலக Whatsapp No: 96262-73399-க்கும் தெரிவிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், பயணிகளின் நலன் கருதியும் திருச்சி மாநகரில் 21.10.2022ம்தேதி முதல் 26.10.22ம்தேதி வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் கீழ்கண்ட தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படவுள்ளது.
தஞ்சாவூர் மார்க்கம் டி.வி.எஸ்.டோல்கேட் — தலைமை தபால் நிலையம் முத்தரையர் சிலை – சேவா சங்கம் பள்ளி – பென்வெல்ஸ் சாலை — அலெக்சாண்டிரியா சாலை– சோனா, மீனா தியேட்டர் எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்துஇயக்கப்படவுள்ளது.
புதுக்கோட்டை மார்க்கம் டி.வி.எஸ்.டோல்கேட் — சுற்றுலா மாளிகை சாலை – பழைய ஹவுசிங் யூனிட் — இலுப்பூர் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளது.
மதுரை மார்க்கம் – மன்னார்புரம் சர்வீஸ் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளது.
தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து, திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசுப் பேருந்துகள், மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கி/ஏற்றி மன்னார்புரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும்.
மற்ற வெளி ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளின் வழித்தடங்களில், எந்தவித மாற்றமுமின்றி வழக்கம்போல மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு சுற்றுப் பேருந்துகள் (Circular Buses) இயக்கவும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்படி தற்காலிக பேருந்து நிலையங்களில், பொதுமக்களுக்கு இன்னல்கள் ஏதும் ஏற்படாவண்ணம் காவல்துறையின் பாதுகாப்பும், மாநகராட்சியின் மூலம் நிழற்குடை, குடிநீர் வசதி, பொதுக்கழிப்பிட வசதி, ஒலிபெருக்கி மூலம் உடனுக்குடன் பயணிகளுக்கு தகவல்களை தெரிவித்தல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்கள்.