துறையூர் பச்சைமலையில் காளான் சமைத்து சாப்பிட்ட 3 பேருக்கு கண் பார்வை பாதிப்பு; மருத்துவமனையில் சிகிச்சை!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சைமயில் விளைந்த காளானை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பழங்குடியினர் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி துறையூர் அருகே பச்சைமலையில் உள்ள தோனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கமலை மகன் நல்லதம்பி. இவர் தனது விவசாய நிலத்தில் விளைந்த காளான்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். அவருடைய மனைவி காளானை சமைத்து தர அவரும் மனைவி செல்லம்மாள் மகன் மணிகண்டன் ஆகிய மூவரும் சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் சிறிது நேரத்தில் மூவருக்கும் வியர்த்துக் கொட்டி கண்பார்வை மயங்கி கீழே விழுந்து உள்ளனர். உடனே அருகில் இருந்த உறவினர்கள் உதவியுடன் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நல்லதம்பியும், மணிகண்டனும் சேர்க்கப்பட்டனர். செல்லம்மாள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். காளான் சாப்பிட்டு கண்பார்வை மங்கி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.