திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலை பழமை மாறாமல் புனரமைக்க இந்து முன்னணி கோரி மனு
திருச்சி, ஏப்.6 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பட்டூர் அருள்மிகு. பிரம்மபுரீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு இடதுபுறம் அமைந்துள்ள தண்டபாணி(முருகர் ) மண்டபத்தில் திருப்பணி நடைபெற்று வருகிறது. அதில் மண்டபத்தின் நுழைவு பகுதியின் மேல் திருக்கல்யாண காட்சி மற்றும் பதஞ்சலி, வியாக்ரபாதர் உள்ளிட்ட பல்வேறு தெய்வ சிற்பங்கள் இருந்தது. ஆனால் தற்போதை புணரமைப்பில் எந்த விக்ரகங்களும் இல்லாமல் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் போன்று உள்ளது. இது பக்தர்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளது. பல நீதிமன்ற தீர்ப்புகளிலும் கோவிலை புனரமைக்கும் போது பழமை மாறாமல் புனரமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளன. மேலும் மண்டபத்தின் உள் பகுதியில் அருள்மிகு. தண்டபாணி சுவாமி மூலவராக அருள்பாலிக்கிறார். மேல் பகுதியில் தெய்வ சிற்பங்கள் இல்லாமல், உள்ளே இறைவன் இருக்கிறார் என்பதை பக்தர்கள் அறியமுடியாது.
எனவே தண்டபாணி மண்பத்தை பழமை மாறாமல் பழைய தெய்வ சிற்பங்களை வைத்து திருப்பணி செய்ய இந்துமுன்னணி மற்றும் திருப்பட்டூர் கிராம பொதுமக்கள் சார்பாக இந்து சமய அறநிலையத் துறை திருப்பட்டூர் கோவில் செயல் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது.