எல்லையம்மன், ரேணுகாதேவிஅம்மன், காலபைரவர் கோவில் கும்பாபிஷேகம் விழா
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே
புள்ளம்பாடி ஒன்றியம் காணக்கிளியநல்லூர் கிராமத்தில் எல்லையம்மன், ரேணுகாதேவி, ஜமதக்னி, பாப்பாத்திஅம்மன் மற்றும் காலபைரவர் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டதையொட்டி இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடந்த 21-ந்தேதி காலை 8 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று முன்தினம் முதல்கால யாகசாலைபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று வியாழக்கிழமை 2 மற்றும் 3-ம்கால யாகபூஜையும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
காலையில் மேளதாளங்கள் முழங்க யாகசலையில் இருந்து தீர்த்த குடங்கள் மூலம் புனித நீர் எடுத்துச்செல்லப்பட்டு கலசங்களுக்கு புனிதநீர் ஏற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அய்யாவாடி சர்வ சாதகர் தண்டபாணி சிவாச்சாரியார் தலைமை தாங்கினார். விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தொழிலதிபர் அருண்நேரு, உயர் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.