மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு
தோட்டக்கலை பயிர்களில் அதிக வருமானம் பெற மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்.
தோட்டக்கலை பயிர்களில் அதிக வருமானம் பெற மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்.
நுண்ணீர் பாசனம்
திருச்சி மாவட்டத்தில் தோட்டக்கலைப்பயிர்களான பழங்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் முந்திரி, தென்னை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
சிறு, குறு விவசாயிகள் ஒரு ஏக்கர் முதல் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரையும், இதர விவசாயிகள் அதிகபட்சம் 12½ ஏக்கர் வரையும், சொட்டுநீர்ப்பாசனம் அமைத்து பயன் பெறலாம். மேலும் 7 ஆண்டுகளுக்கு முன்பு சொட்டுநீர்ப்பாசனம் அமைத்திருப்பின் தற்போது மீண்டும் புதிதாக சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து கொள்ளலாம்.
துணை நிலை மேலாண்மை திட்டம்
சொட்டுநீர்ப்பாசன திட்டத்தை செயல்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் துணை நிலை மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரமும், டீசல் மோட்டார் அல்லது மின்மோட்டார் அமைக்க ரூ.15 ஆயிரமும், தரை நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரமும் மற்றும் குழாய்கள் பெற்றுக்கொள்ள ரூ.10 ஆயிரமும் மானியம் வழங்கப்படுகிறது.
எனவே நுண்ணீர் பாசனத்தில் பதிவு செய்யும் விவசாயிகள் துணை நிலை நீர் மேலாண்மை சிறப்பு திட்டத்திலும் பதிவு செய்து பயன் அடையலாம். இந்த திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள், கணினி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நிலவரைப்படம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-3 மற்றும் தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட சிறு, குறு விவசாயி சான்று, மண், நீர் பரிசோதனை அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து முன் பதிவு செய்யலாம்.
மானியத்தில் நுண்ணீர் பாசனம்
மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு ஆவணங்களை சமர்ப்பித்து மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்து பயனடையலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.