மது போதையில் வாகனம் ஓட்டியதால் காவல்துறையினர் அபராதம் விதிப்பு: தொழிலாளி தற்கொலை முயற்சி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே மேட்டுப்பட்டி அண்ணா நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (27). இவர் தச்சு வேலை செய்து வருகிறார். நேற்று மேட்டுப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சுப்பிரமணி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் அபராதம் விதித்தனர். நண்பர்களிடம் பணம் கடன் வாங்கி அபராதம் பத்தாயிரம் ரூபாய் கட்டி விட்டு வாகனத்தை சுப்பிரமணி மீட்டு கொண்டு வந்துள்ளார். பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்து வாட்ஸப்பில் வீடியோ வெளியிட்டார். இது வைரலாக பரவிய நிலையில் சுப்பிரமணி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.