திருச்சி அண்ணாநகர் சமத்துவபுரத்தை சேர்ந்த 19 வயது வாலிபர், திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த முதலாமாண்டு கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். மாணவி திருச்சி பெரியமிளகுபாறையில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்தார். இவர்களுடைய காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது.
இதையடுத்து மாணவியிடம் சமாதானமாக பேசிய பெற்றோர், இனி இருவரையும் சந்திக்க விடக்கூடாது என முடிவு செய்தனர். இந்தநிலையில் காதலியுடன் பேசாமல் தவித்து வந்த அந்த வாலிபர் நேற்று முன்தினம் இரவு காதலியை பார்ப்பதற்காக பெரியமிளகுபாறைக்கு வந்தார். அங்கு அவரை சந்தித்து பேசி கொண்டு இருந்தார். இதை கண்ட மாணவியின் உறவினர்கள் வாலிபரை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தனர்.
பின்னர் அவரது சட்டையையும் கிழித்தனர். இதையடுத்து அந்த வாலிபரும், மாணவியும் செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர். இதையடுத்து இருவரையும் கண்டோன்மெண்ட் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். மகளிர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.