சுடுகாட்டிற்கு கொட்டகை கேட்டு இறந்தவரின் உடலை ஆம்புலன்சில் வைத்து கொண்டு சாலை மறியல்
திருவெறும்பூர் அருகே உள்ள மலை கோவில் தெற்கு மாரியம்மன் கோவில் தெரு திருவெறும்பூர் பேரூராட்சியாக இருந்தபோது 18வது வார்டாக இருந்தது. இந்த பகுதியில் இறப்பவர்களை அப்போது எல்லக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கயர் வாய்க்கால் (என்ற) குவளை வாய்க்கால் கரையில் எரிப்பதும் புதைப்பதும் வழக்கம். சுடுகாட்டில் உடல்களை எரிக்கும் பொழுது மழை காலங்களில் பாதிப்பில்லாமல் இருக்கும் பொருட்டு எறி மேடை மேற்கூரை போடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அது புயல் மற்றும் மழையில் கடந்த 10 வருடத்திற்கு முன்பு எரிமேடை மேற்கூரை உடைந்து போனது. இந்த நிலையில் இந்த பகுதி திருச்சி மாநகராட்சியோடு இணைக்கப்பட்டது. மேலும் மலைக்கோவில் தெற்கு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பகுதி திருச்சி மாநகராட்சி 65 வது வார்டு பகுதியில் வருகிறது.
குவளை வாய்க்கால் கரை 63வது வார்டு பகுதியில் வருகிறது. இந்த பகுதியில் தங்கள் இறந்தவர்களை தகனம் செய்வதற்கு எரிமேடை மற்றும் மேற்கூரை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்ததாகவும், இதுகுறித்து திருச்சி கலெக்டரிடம் மனு கொடுத்ததாகவும் கூறுகின்றனர்.

மேலும் இதன் அடிப்படையில் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் பொதுப்பணித்துறையிடம் இருந்து (என்ஓசி) தடையில்லா சான்று வாங்கி கொடுத்தால் அந்த இடத்தில் எரிமேடை மற்றும் மேற்கூரை அமைத்து தரப்படும் என கூறியதோடு அதற்கு உரிய திட்ட மதிப்பீடு செய்யாமல் டெண்டர் விடாமல் கடந்த ஒரு வருடங்களாக காலம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவெறும்பூர் தாசில்தாரிடம் இது குறித்து அந்த பகுதி மக்கள் பேசியதாகவும் அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருந்த கூறப்படுகிறது
இந்நிலையில் திருவெறும்பூர் பேரூராட்சியாக இருந்த போது 18-வது வார்டு கவுன்சிலராக இருந்த நாகராஜ் (55) என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். அப்படி இறந்தவரின் உடலை தகனம் செய்வதற்காக குவளை வாய்க்கால் கரைக்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது மழை பெய்ய வரும் சூழ்நிலை இருப்பதால் மழை பெய்தால் உடல் எறிவதில் பிரச்சினை ஏற்படும் என்பதால் திடீரென திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்லன்ஸில் வந்த பினத்தோடு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெத்தினகுமார் மற்றும் திருவெறும்பூர் தாசில்தார் செல்வகணேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதியதோடு இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த பகுதியில் எரி மேடை மேற்கூரை அமைத்து தரப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.