திருச்சி மாநகரில் 87 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான அலுவலர்கள் பீமநகர், அரியமங்கலம், சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது பீமநகர் அரியமங்கலத்தில் உள்ள பேக்கரியில் காலாவதியான மற்றும் தயாரிப்பு தேதி இல்லாத 13 கிலோ பிரட் மற்றும் 6 லிட்டர் கிரீம் பால் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள 15 கடைகளில் ஆய்வு செய்த போது உணவு பொருள்களில் காலாவதியான மற்றும் தயாரிப்பு தேதி இல்லாத 68 கிலோ உணவுப்பொருள்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 4½ கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 கடைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இவற்றில் பறிமுதல் செய்த உணவு பொருட்களில் 8 மாதிரிகள் தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தெரிவித்தார்.