அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் 6 முருகன் கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கும் சுற்றுலா
அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் சார்பில் 6 அருள்மிகு முருகன் கோயில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு சுற்றுலா பேருந்து 19-10-2024 அன்று காலை 9.00மணியளவில் திருப்பனந்தாள் அருள்மிகு. அருண ஜடேஸ்வரர் சுவாமி திருக்கோவில் வளாகத்திலிருந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் , உயர்கல்வித்துறை அமைச்சர், திருப்பனந்தாள் காசிதிருமடம் ஆதினம் ஶ்ரீலஶ்ரீ முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள் ஆகியோர்களும் தொடங்கி வைக்கப்படவுள்ள நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்பார்கள் என நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி தெரிவித்துள்ளார்.
பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்கவும், போக்குவரத்துத்துறை அமைச்சர் வழிக்காட்டுதலின்படியும் இச்சிறப்பு பேருந்து 19-10-2024 முதல் இயக்கப்படவுள்ளது.
சிறப்பு சுற்றுலா பேருந்து கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் எண்கண் அருள்மிகு. சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் (திருவாரூர் மாவட்டம்), சிக்கல் ஶ்ரீ சிங்காரவேலன்ஆலயம், பொரவச்சேரி அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், எட்டுக்குடி அருள்மிகு. சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் (நாகப்பட்டிணம் மாவட்டம்), அருள்மிகு. சுவாமிநாதசுவாமி திருக்கோயில், சுவாமிமலை, ஏரகரம் ஆதி சுவாமிநாதசுவாமி திருக்கோயில் ஆகிய ஆறு கோயில்களையும் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக ஆறுமுருகன் திருத்தலம் சுற்றுலா பேருந்து இயக்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக முக்கிய பண்டிகை மற்றும் விழா நாட்களிலும் முன்னுரிமை அளித்து எந்தசிரமமும் இன்றி தரிசனம் செய்து திரும்பும் வகையில் அறநிலையத்துறை அலுவலர்களுடன் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து தேவையான வசதிகளை செய்து தருவார்கள்.
நபர் ஒன்றுக்கு கட்டணம் ரூ.650/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் சார்பில் இயக்கப்படும் அருள்மிகு.முருகன் கோயில்களுக்கு சிறப்பு பேருந்தில் பயணம் செய்ய விருப்பம் உள்ள பயணிகள் கீழ்கண்ட இணையதள முகவரியில் முன்பதிவு செய்து தங்களது பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் அருள்மிகு.முருகன் கோயில்களுக்கு சிறப்பு சுற்றுலா பேருந்து வசதியினை இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள இயலும். நேரடியாக பேருந்தில் பயண சீட்டு பெற்றுக் கொள்ள இயலாது.
எவ்வித சிரமமின்றி பயணிக்க “மொபைல் ஆப் www.tnstc.in (Mobile App) Android/I phone கைபேசி மூலமாகவும்” முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசுப் போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி தெரிவித்துள்ளார்.