திருச்சி ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் ஏட்டு கருணாகரன், போலீஸ்காரர்கள் மணிமாறன், கார்த்திகேயன் அடங்கிய குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரத்தில் வந்து நின்றது.

அப்போது ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் பெட்டிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கொல்கத்தாவை சேர்ந்த 2 பேர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபர் சந்தேகத்திற்கிடமாக 6 கிலோ எடையுள்ள வளையல், நெக்லஸ், ஆரம், நெத்திச்சூடி உள்ளிட்ட ஆபரண நகைகள் கொண்டு செல்வது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.3 கோடி ஆகும். ஆனால், அதற்குரிய ரசீதோ ஆவணங்களோ ஏதும் அவர்களிடம் இல்லை.
இதுதொடர்பாக வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருச்சியில் உள்ள மாநில வரி அலுவலர் செல்வம், துணை மாநில வரி அலுவலர் சுந்தர்ராஜன் ஆகியோர் நேரடியாக வந்து ஆய்வு செய்து எவ்வித ஆவணங்களும் இல்லாததால் அதற்காக ரூ.17 லட்சம் அபராதம் விதித்தனர். பின்னர் உரிய ஆவணங்கள் காண்பித்த பின்னர் இந்த நகைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சியில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தங்கநகை ஆபரணங்கள் எவ்வித ஆவணமும் இன்றி கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.