மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, ‘நீட்’ நுழைவு தேர்வு இன்று நடக்கிறது. நாடு முழுதும் 16 லட்சம் பேரும், தமிழகத்தில் 1.10 லட்சம் பேரும் தேர்வு எழுத உள்ளனர். நாடு முழுவதும் 202 நகரங்களில் 3,862 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 38 மாவட்டங்களை சேர்ந்த 1.10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 70 ஆயிரம் மாணவியர் மற்றும் 40 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் நகரங்களில் மொத்தம் 224 பள்ளி, கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தை பொருத்த வரை மொத்தம் 9,105 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். திருச்சியில் குறிப்பாக 21 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு காலை முதலே மாணவர்கள் வர தொடங்கி உள்ளனர். தேர்வு மதியம் 1 மணிக்கு ஆரம்பிக்க உள்ள நிலையில் மாணவர்கள் தற்போது தேர்வு மையங்களில் தங்களுடைய தேர்வுக்காக காத்திருக்கின்றார்.

குறிப்பாக திருச்சி மணிகண்டன் இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி நீட் தேர்வு மையத்தில் போலீசாரின் பாதுகாப்பு போடப்பட்டு மாணவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. தேர்வுக்கான வழிகாட்டு முறைகளையும் காவல் துறையோடு ஒத்துழைப்புடன் தற்போது வழங்கி வருகின்றனர்.