கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 7½ பவுன் தாலி சங்கிலி பறிப்பு

0 502
Stalin trichy visit

திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள கருமண்டபம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. அதே பகுதியில் எண்ணை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்லக்கிளி (வயது 61). இந்த தம்பதியரின் பிள்ளைகளுக்கு திருமணமாகி வெளியூர்களில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் ராமமூர்த்தி கருமண்டபத்தில் கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் பவுன் தாலி சங்கிலி பறிப்பு வழக்கம்போல் எண்ணை கடையை திறக்க சென்றுவிட்டார். இன்று வெள்ளிக்கிழமையாக இருந்தததால் வீட்டின் சற்று தூரத்தில் சக்தி நகர் பகுதியில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக செல்லக்கிளி நடந்து சென்றுகொண்டிருந்தார். கோவிலுக்கு அருகிலுள்ள அருணா அவென்யூ பகுதியில் நடந்து சென்றபோது எதிரில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த ஒருவர் வந்துள்ளார். செல்லக்கிளி அருகே வந்த அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தாலி சங்கிலியை பறித்தார். இதனை சற்றும் எதிர்பாராத செல்லக்கிளி நகையை தக்க வைக்க போராடினார். மேலும் திருடன், திருடன் என்று கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த மர்ம நபர் பறித்த நகையுடன் தப்பினார். இதையடுத்து அவர் கண்டோன்மென்ட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கண்டோன்மென்ட் உதவி போலீஸ் கமிஷனர் மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகியோர் நகையை பறிகொடுத்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த கொள்ளையனை தீவிரமாக தேடி வருகிறார்கள். குறிப்பாக மக்கள் நடமாட்டம் மிகுந்த, குறிப்பாக அருகிலேயே கருமண்டபம் போலீஸ் சோதனைச்சாவடி அமைந்துள்ள பகுதியில் இந்த துணிகர நகை பறிப்பு சம்பவம் பட்டப்பகலில் அரங்கேறி உள்ளது. திருச்சி கருமண்டபம் பகுதி கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவருவதற்கு ஏற்ப கடந்த சில மாதங்களில் மட்டும் ஏராளமான நகை கொள்ளை, செயின் பறிப்பு, நூதன மோசடி உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்.எம்.எஸ். காலனி பகுதியில் ஐ.ஓ.பி. நகர் அருகில் ஒரு திருமண வீட்டில் பட்டப்பகலில் 100 பவுன் நகை கொள்ளை, கொரோனா தடுப்பூசி செலுத்த சென்ற மூதாட்டியை ஏமாற்றி நகை பறிப்பு, நடந்து செல்பவர்களிடம் மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்கள் செல்போன் பறிப்பு என மக்கள் அச்சத்துடனேயே வாழ்நாளை கடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். பகல் மற்றும் இரவு நேரங்களிலும் போலீசார் மாறுவேடத்தில் ரோந்து பணி சென்று கொள்ளை, வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் என்று கருமண்டபம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.