டெங்கு கொசு உற்பத்தியை அழிக்க கிணறுகளில் மீன்குஞ்சுகளை விடும் பணி தீவிரம்
திருச்சி மாநகர பகுதிகளில் டெங்குகாய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். கடந்த ஆண்டு டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்காத வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தநிலையில் திருச்சி மாநகராட்சி 61வது வார்டுக்குட்பட்ட கமலாநேருநகரில் சிறுமி ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அந்த பகுதியில் டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்கும் வகையில், அங்குள்ள நல்ல தண்ணீர் கிணறுகளில் கம்பூசியா மீன்குஞ்சுகளை விடும் பணியில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பரசுராம் தலைமையில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். 20க்கும் மேற்பட்ட கிணறுகளில் ஆயிரக்கணக்கான மீன்குஞ்சுகளை விட்டனர். இந்த வகை மீன்குஞ்சுகள் டெங்கு கொசுமுட்டைகளை உட்கொண்டு டெங்கு கொசு உற்பத்தி ஆகாமல் தடுத்துவிடும். மேலும், சுகாதார பணியாளர்கள் அந்த பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணியிலும், அபேட் மருந்து தெளிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.