முசிறி அருகே சொரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் இவரது மகள் திரிஷா(8) தோட்டத்திற்கு குளிக்க சென்றபோது மின்மோட்டார் ஒயரை எதிர்பாராதவிதமாக தொட்டுள்ளார். மின்கசிவு இருந்த நிலையில் மின்மோட்டார் வயரை தொட்டதும் திரிஷா மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மணி மற்றும் முசிறி போலீசார் சொரியம்பட்டி கிராமத்திற்கு சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முசிறி அருகே மின்சாரம் தாக்கி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.