குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது, இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக மழையின் பாதிப்பு என்பது அதிகமாக இருக்கிறது, பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்து பல்வேறு பகுதிகள் தற்போது வெள்ள நீர் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திருச்சி ஒத்தக்கடையில் இருந்து அரசு மருத்துவமனை செல்லக்கூடிய பாரதிதாசன் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

மேலும் இந்தப் பகுதியில் வரும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவு இந்த பள்ளத்தை கடந்து செல்லும் போது ஒருவர் மீது ஒருவர் அடித்து விடும் அபாயம் உள்ளது. மேலும் இந்தப் பகுதியில் மழைநீர் தேங்குவதால் சாலை முழுவதும் மழை நீர் மூடி, பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதேபோன்று மத்திய பேருந்து நிலையம் உள்பகுதியில் பேருந்துகள் வெளி மாவட்டத்தில் இருந்து உள்ளே வரும் போது அதிக அளவு பள்ளங்கள் இருப்பதால், பள்ளத்தில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் மீது தெளித்து, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.