விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்!
புதுக்கோட்டை விராலிமலையை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர், சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவர் கடந்த 1ம் தேதி புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை நோக்கி ஆட்டோவில் சென்றபோது, திடீரென விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அந்த வாலிபரை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுமதித்தனர். பின்னர் அவர் கடந்த 6ம் தேதி திருச்சி அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அந்தவாலிபரின் உடல் உறுப்புகளைதானம் வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர். அவரது உடல் உறுப்புகளான 2 சிறுநீரகம், நுரையீரல், 2 கண்கள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதில் ஒரு சிறுநீரகம் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மற்றும் 2 கண்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கும், நுரையீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டது. இதுகுறித்து முருகேசனின் உறவினர்கள் கூறுகையில், முருகேசன் சம்பாதித்த பணத்தை மற்றவர்களுக்கு வழங்கி உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். தற்போது இறந்தும் தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கி 5 பேருக்கு வாழ்வு அளித்துள்ளார் என்றனர்.