அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி, செப். 9 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெஸ்டோ நகர், வடக்கு பாரதியார் நகர் குமரப்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் பல வருடங்களாக சீரமைக்கப்படாத சாலைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், கடந்த 15 நாட்களுக்கு மேலாக காவிரி குடிநீர் வினியோகம் முறையாக இல்லை என்றும் மற்ற தேவைகளுக்கான தண்ணீர் கூட கிடைப்பதில்லை என ஆத்திரமடைந்த பகுதி மக்கள் குமாரப்பட்டி சாலையில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த ஊராட்சி செயலாளர் சந்திரசேகர் மற்றும் வார்டு உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து முறையான குடிநீர் விநியோகம் செய்து தருவதாகவும், சாலை வசதிகளை செய்து தருவதாகவும் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.