சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடியே 45 லட்சம் காணிக்கை வசூல்
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
அவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர்.
அப்போது பக்தர்கள் கோயில் உண்டியலில் கடந்த 20 நாட்களில் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூ. 1 கோடியே,45 லட்சத்து,09 ஆயிரத்து 609 ரொக்கமும்,3 கிலோ 860 கிராம் தங்கமும், 6 கிலோ 475 கிராம் வெள்ளியும், 201 அயல்நாட்டு நோட்டுகளும் கிடைக்கப் பெற்றன எனத் கோயிலின் இணை ஆணையர் தகவல் தெரிவித்தார்.