கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது
கடந்த 25.10.22 -ந்தேதி கண்டோன்மெண்ட் காவல்நிலைய முடுக்குபட்டி மதுபான கடையில் மதுபோதையில் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற நபரை பீர்பாட்டிலால் தாக்கி கொலை செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கல்லுகுழியை சேர்ந்த சரவணன் (30) என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 26.10.22-ந்தேதி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஷ் ரெயில்வே பாலம் அருகே நடந்து சென்ற தினக்கூலி ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3000/- பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி மருதமுத்து @ பூச்சிகுண்டு ராஜா (28)என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் எதிரி மருதமுத்து பால் வியாபாரியை கொலை முயற்சி செய்ததாக ஒரு வழக்கும், கத்தியை காண்பித்து பணம் பறித்ததாக ஒரு வழக்கு உட்பட 3 வழக்குகள் ஸ்ரீரங்கம் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவருகிறது.
எனவே, 1) சரவணன் 2) மருதமுத்து @ பூச்சிகுண்டு ராஜா ஆகியோர்கள் தொடர்ந்து காட்டி மிரட்டி பணம் பறிப்பவர்கள் எனவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்பந்தபட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.