திருச்சி இ.பி.ரோடு சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் திவ்யா (வயது 31). இவர் அதே பகுதியில் உள்ள ஞானசேகர் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதன் காரணமாக அவர் கர்ப்பமாகி உள்ளார். 6 மாத கர்ப்பிணியான திவ்யாவை ஞானசேகர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் 10 பவுன் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், ஞானசேகருக்கு அவரது குடும்பத்தினர் வேறு இடத்தில் பெண் பார்த்து வருவதோடு, வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி, கணவரை மறைத்து வைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து திவ்யா கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தாமதப்படுத்துவதாக குற்றம் சாட்டி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு திவ்யா தனது தனது பெற்றோர், உறவினர்கள் மற்றும் குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்திய அனைத்து மகளிர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்கிறோம் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து அவர் அங்கிருந்து சென்றார்.