பாடத்திட்டங்களை குறைக்க வேண்டிய அவசியமில்லை; கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் முடிக்கப்படும்- அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
திமுக இளைஞர் அணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின்
பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மன்னார்புரத்தில் உள்ள விழியிழந்த மகளிர் மறுவாழ்வு மையத்தில் நலத்திட்ட உதவிகளை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், தேசிங்குராஜா, சக்திபிரகாஷ், ரவீந்திரன், விஷ்ணுவரதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ் குமார் ஏற்பாடு செய்திருந்தார். இதில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டியளிக்கும்போது கூறுகையில்,

ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வரும் நிலையில், இனியும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை குறைக்க வேண்டிய அவசியமில்லை. மழை பாதிப்பு குறைந்த பின்பு பள்ளிகளில் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் முடிக்கப்படும். தனியார் பள்ளிகளுக்கு 3 வருடத்திற்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான் இந்த நடைமுறையே தொடரும் என்றார்.
கேள்விக்கு பதில்
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவெறும்பூர் பகுதியில் மழை பாதிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு செய்த போது, விவசாயி ஒருவரை அவமரியாதையாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், மக்களிடம் குறைகளை கேட்டுக்கொண்டிருந்தபோது அவர் தன்னுடைய வயலை தனியாக வந்து பாருங்கள் என்று கூறிக்கொண்டே இருந்தார்.
அந்த நேரத்தில் நான் அவ்வாறு பேசினேன். அது வருந்தத்தக்கது தான். நான் அவ்வாறு பேசியிருக்க கூடாது. அந்த விவசாயின் நிலம் 5 ஏக்கர் உட்பட 80 ஏக்கர் வயல்வெளி பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் நிவாரணம் பெற்று தர வேண்டியது அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில் என் கடமை அதை செய்வேன் என கூறினார்.