திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி முசிறி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் போலீசார் காவிரி பெரியார் பாலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனர்.
அதில் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தொட்டியம் பகுதியை சேர்ந்த நல்லசிவம்(வயது 19), விஜய் (வயது 21) என்பதும், முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களையும், தொட்டியத்தில் 2 ஆடுகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து 7 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் வாலிபர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.