திருச்சி ஸ்ரீரங்கம் சிறுகமணி பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (62). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் ராஜேஸ்வரி பெட்டவாத்தலை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது ஜம்முதாவியில் இருந்து திருச்சி நோக்கி ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ராஜேஸ்வரி மேய்த்து கொண்டிருந்த பசு மாடு ஒன்று ரெயில்வே தண்டவாளத்தில் நின்று கொண்டு இருந்தது.
இதை பார்த்த ராஜேஸ்வரி பசு மாட்டை காப்பாற்ற முயற்சி செய்தார். அப்போது ரெயில் மோதி ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அந்த பசு மாடும் ரெயிலில் அடிபட்டு செத்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனே இதுகுறித்து திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.