தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. கடைசி நாளான இன்று தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திருச்சி மாநகராட்சி 20வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஜவர்ஹலால்நேருவை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், ஜவர்ஹலால்நேருவின் தந்தையுமான வெல்லமண்டி நடராஜன் பெரியகம்மாளதெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சென்ற இடம் எல்லாம் அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, ஆரத்தி எடுத்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தின்போது அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மற்றும் செய்யப்பட்ட சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். பின்னர் ஜவர்ஹலால்நேரு வெற்றி பெற்று வார்டு உறுப்பினர் ஆனவுடன் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தனர். அப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.