திருச்சி பெரிய கடை வீதி சின்ன கம்மாள தெருவைச் சேர்ந்தவர் மணி(வயது 49). வியாபாரியான இவர் சம்பவத்தன்று சின்ன கம்மாள தெரு பகுதியில் உள்ள ஒரு கடை அருகே சென்றபோது எதிரே வந்த 4 பேர் மணியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் மற்றும் ஒரு செல்போனை பறித்து சென்றதாக மணி கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன், சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் மணியிடம் பணம் மற்றும் செல்போனை பறித்த காட்சியை வைத்து தாராநல்லூர் சுரேஷ் பங்களாவை சேர்ந்த வீரபாண்டி (வயது20), உப்பிலிய தெருவைச் சேர்ந்த பிரபு என்கிற பிரபாகரன் (வயது19), பூண்டுக்கார தெருவைச் சேர்ந்த சந்துரு என்கிற சந்திரமோகன் (வயது20), தாராநல்லூரை சேர்ந்த வாசுதேவன் (வயது19) ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.