தவறு செய்யாமல் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்த ஏற்பாடு
திருச்சி ரவி மினி ஹாலில் தமிழ்நாடு அரசு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை அலுவலர்கள் சங்க மாநில நிர்வாகிகள் சங்க தேர்தல் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் மாநில தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வட்டார தொழில் நுட்ப மேலாளர் செ.செந்தில்குமார், மாநில துணைத் தலைவராக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் சாமுவேல் டென்னிசன், மாநில செயலாளராக அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ஈழவேணி, மாநில துணைச் செயலாளராக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அஷ்ரப் அலி, மாநில பொருளாளராக திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வம், மாநில துணைப் பொருளாளராக சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் தேர்தல் முடிந்த நிலையில் தலைவர், செயலாளர், பொருளாளர் உறுப்பினர்களில் ஆலோசனை பெற்று மாநில அளவிலான பத்து ஆண்டுகளில் முதல் மாநாடு நடத்தப்படும். இயற்கை விவசாயம், பாரம்பரிய நெல் விதைகள், விவசாய தொழில்நுட்பங்கள் அடங்கிய பண்ணைக் கருவிகள் இவைகள் அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து மாபெரும் விவசாய கண்காட்சி ஒன்று நாட்டின் மையப்பகுதியில் நடத்தப்படும். வேளாண்மை துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் வேளாண்மை அலுவலர் சங்கம், உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்துடன் நல்ல உறவினை ஏற்படுத்த வழி வகை செய்யப்படும்.
(பி.எம்.கிஸ்ஸான்) திட்டத்தில் தவறு செய்யாமல் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் அமர்த்த ஏற்பாடு செய்யப்படும். ஆண்டுதோறும் சிறப்பாக பணி செய்யும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அடையாளம் கண்டு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று மாவட்ட ஆட்சியர் கரங்களால் விருதுகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். பணி நிரந்தர படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மகளிற்கான ஊதியத்துடன் கூடிய மகப்பேரு விடுப்பு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் நலன் கருதியும், நாட்டு மக்கள் நலன் கருதியும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் வேளாண் குடிகளின் மகசூல் பெருக்க மழை பெறவும் வருடம் தோறும் ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு புறம்போக்கு இடங்கள் சாலையோரங்கள் போன்ற இடங்களில் மரம் நடப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.