தீபாவளிக்கு விற்பதற்காக அனுமதியின்றி வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிபுள்ள பட்டாசுகள் பறிமுதல்
திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பன், ஏட்டு இளங்கோவன் மற்றும் போலீசாருடன் கோட்டை பகுதியில் உள்ள அனைத்து பகுதியிலும் கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டுகள் மற்றும் தீபாவளி பண்டிகைக்காக யாராவது அனுமதியின்றி விற்பனை செய்வதற்காக பட்டாசுகள் வாங்கி வைத்திருக்கிறார்களா? என ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மேலசிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீபாவளிக்கு விற்பதற்காக பட்டாசுகள் வாங்கி பதுக்கி வைத்திருப்பதாக ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலை அடுத்து திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-இல் அந்த வீட்டை சோதனை செய்வதற்காக அனுமதி கடிதம் பெற்றனர். பின்னர் மேலசிந்தாமணி காவேரி பார்க்கில் உள்ள அந்த வீட்டை அதிரடியாக சோதனை செய்தனர்.
அதில் அந்த வீட்டின் ஒரு அறையில் 11 பெட்டிகளில் மறைத்து வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பல்வேறு வகையான பட்டாசு பாக்ஸ்களை கைப்பற்றினர். பின்னர் அந்த வீட்டில் இருந்த கோவிந்தன் மகன் ஷியாம் சுந்தர் (வயது 40) என்பவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.