திருச்சி விமான நிலையத்தில் பயணிகளை திடீரென சோதனையிட்ட சுங்கத்துறை அதிகாரிகள்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் திருச்சி விமான நிலையத்தில் 11.5 கிலோ தங்கமும் அதனைத் தொடர்ந்து 8 கிலோ தங்கம் என மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு உடந்தையாக இருந்த சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தங்கம் கடத்தி வருவது குறைந்திருந்த நிலையில் சுங்க துறை உதவி ஆணையர் மற்றும் சுங்கத்துறை ஆய்வாளர்கள் உட்பட அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதன்படி ஷார்ஜா, துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் இருந்து 5 விமானங்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகளுடன் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் சந்தேகத்திற்கிடமான 3 பயணிகளை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களிடம் இருந்து ஏதேனும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதா? என்பது விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இரவு 8.50 மணிக்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தினர்.