கிரிக்கெட் விளையாடியது தொடர்பாக தகராறு; 4 பேருக்கு அரிவாள் வெட்டு
திருச்சி மாவட்டம், முசிறி அருகே அய்யம்பாளையம் ஊராட்சி அந்தரப்பட்டி கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் பழனிசாமி(வயது 30), கொள்ளுகட்டி பாளையத்தை சேர்ந்த பழனிவேல் மகன் சதீஷ் மற்றும் சில நண்பர்கள் சேர்ந்து நேற்று மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது கிரிக்கெட் போட்டி விளையாடியது தொடர்பாக பழனிசாமி, சதீஷ் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு சதீஷ் சுமார் 10 நபர்களுடன் அந்தரபட்டி கிராமத்திற்கு சென்று பழனிசாமியை சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது.
அப்போது தடுக்க சென்ற ரெங்கநாதன் மனைவி வளர்மதி(26), பரமன் மகன் கல்ராயன்(55), பழனியாண்டி மகன் சண்முகம் ஆகியோரையும் அரிவாளால் தாக்கி உள்ளனர். இதில் 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் இவர்களுக்கு சொந்தமான 4 ஆடுகளையும் அந்த நபர்கள் அரிவாளால் வெட்டியதில் மூன்று ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மணி, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மோகன்ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.