திருச்சி மாநகர் பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில் நடக்கும் விபத்துகளுக்கு உடனடி முதலுதவி செய்யவும், போக்குவரத்து நெருக்கடி காணப்படும் இடங்களில் உடனே சென்று போக்குவரத்தை சீர் செய்து பொது மக்களுக்கு உதவி செய்யவும், திருச்சி மாநகர போக்குவரத்து ஒழுங்கு பிரிவினருக்கும் “டிராபிக் மார்ஷல்” எனப்படும் முதலுதவி பெட்டி கொண்ட இருசக்கர வாகனத்தை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருச்சி மாநகர கண்டோன்மெண்ட், அரியமங்கலம், பாலக்கரை, கோட்டை, உறையூர் மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய ஆறு போக்குவரத்து ஒழுங்கு பிரிவினருக்கு தலா இரண்டு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. இந்த வாகனத்தில் இருவர் வீதம் ஒவ்வொரு போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் நிலையத்திலும் பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலுதவி செய்யும் பயிற்சி முடித்த காவலர்கள் இந்த போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்று முதலுதவி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் சக்திவேல் மற்றும் முத்தரசு ஆகியோர் உடனிருந்தனர்.